ஏகமாய்ப் புசித்து ஈசிச்சேரில் சாய்ந்து பில்டர் காப்பி குடித்து ஹிண்டு படிக்கும் பாப்பானுக்கு தெரியாது என் வீட்டுச் சோறில்லா செய்தி. -- நாய் வேஷம் போட்டும் குரைக்க முடியவில்லை பசி. -- பசியறுக்க அரிசி இல்லையென்றாலும் ஆஸ்திரேலியா ஜெயிக்க கூடாது
இந்தியன். -- சமபந்தி விருந்து செட்டி முதலி பாப்பான் பறையன் யாவரும் ஒரே பந்தியில் செய்திக்காக ஒரு நாள் மட்டும். --
நிலவரம்
மூனு வருசமா ஒரே பேண்ட் இப்போதெல்லாம் நானே முடித்திருத்திக்கிறேன்
ஆளைப் போலவே நாளுக்கொரு சேலை கூந்தலில் குண்டுமல்லித் தோட்டம் ஊரை இழுக்க உதட்டுச் சாயம் அவசியமில்லாத இடத்திலும் பத்துப்பல் புன்னகை வேலைப் பளுவால் விரைவாய்த் தொலைத்த வயது.
பத்து நிமிடத்திற்குள் செய்துவிட முடியும் பணம் வேசியால்.
மேஸ்திரியின் மோகம் எதிர்த்து செங்கற்கள் அஞ்சுக்குப் பதிலாய் எட்டென சுமந்து பசியைப் பொறுத்து பக்குவமாய் சேர்த்து வாங்கிய கம்மல் பிள்ளையின் பருவத் தேர்வுக் கட்டணத்திற்கு அவிழ்க்கப்படும்.
பத்தினியாய் வாழ்ந்து பார் பத்துநாள் தள்ள முடியாது.
இது கேள் இந்தியா வேசியாய் அரிதாரம் பூசியதே பதினோராம் நாள் தானே.
வகை
ஒட்டி வாழ்தலில் ஒட்டுதலின்றி சிலரும் பிறரை ஒட்டியே பலரும் சிலர் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பினும் யாவர்க்கும் மண்வெட்டியே முடிகிறது வாழ்க்கை.
இலக்கணம்
யாப்பு தெரியாது வெண்பா வெறுப்பு அணி அறியேன் சந்தம் மந்தம் அவளின் உயிரும் மெய்யும் தெரியுமெனக்கு ஆதலால் சந்தித்துத் திரும்புகையில் சத்தமில்லாமலும் சந்தமில்லாமலும் குறைந்தப்பட்சம் ஒரு கவிதை உறுதி.
இங்கு முதிர்ந்த பெற்றோர் முதியோர் இல்லம் கொண்டாலே குற்றமெனக் கொதிக்கிறோம். அங்கு பிஞ்சு சிசுக்களை மசக்கையின் போதே மயானம் அனுப்பினோமே.
இங்கு பள்ளிக் குழந்தை பத்து நிமிடம் தாமதமெனில் அழுதுத் தொலைக்கிறோம் அங்கு பள்ளிக் குழந்தைகள் அத்தனை மீதும் தோட்டாக்கள் பாய்ந்ததே என்ன செய்தோம்?
உதிரம் பரவிய உடம்பொடு நின்ற உடன்பிறந்தவனுக்காக என்ன செய்தோம்? கிழிந்த மார்போடு கதறித் துடித்த பெண்ணைப் பார்த்து என்ன செய்தோம்? மருத்துவமனையில் குண்டுகள் யாவும் மொத்தமாய் விழுந்தும் நமக்கு செவிகள் ஏனோ மந்தமாய்க் கேட்டது இல்லை இல்லை செத்தே விட்டது.
எரியும் தீயில் விரலை விட்டால் இழுத்துக் கொள்ளும் அனிச்சை செயல் தமிழா! உன் இனமே எரியும் போதும் நீ அமைதியாய் இருந்தாய் எப்படி சொல்?
போராட்டம் நடத்தினோம் பேரணி நடந்தோம் மனிதசங்கிலிக் கூட்டினோம் உண்ணாவிரதம் இருந்தோம் ஆறு கோடி பேரால் ஆறு தமிழனையாவது மீட்க முடிந்ததா?
ஏய் வெறியனே!
அதெப்படி உன் குண்டுகள் காட்டில் விழுந்தாலும் தாவரத்தை விடுத்து தமிழனைக் கொன்றது மிருகத்தை விடுத்து மனிதனைக் கொன்றது?
முலைகளை அறுத்து வியாபாரம் செய்தது உலக வரலாற்றில் இதுவரை இல்லை. முதியோர் மழலை பெண்களென எல்லோர் மீதும் குண்டுகள் பொழிந்தாய் அதில் மட்டும் நீ சமத்துவம் காத்தாய்.
தமிழன் என்ற ஒரு சொல் மட்டும் தவறாய் உனக்கு படுவதுமேன்? தமிழனாய் பிறந்தது ஒன்றை விடுத்து வேறேது செய்தான் என் தமிழன்.
கவிதை எழுதும் இக்கணமே எனக்கு தாரை தாரையாய் கண்ணீர். கவிதையெழுதவே வலிக்கிறதெனக்கு ஓ சிசுவே! குண்டுகள் எப்படி சுமந்தாய் கண்ணே?
அங்கு அரசியலால் உயிர்கள் இல்லை. இங்கு அரசியலில் உயிர்ப்பு இல்லை.
இங்கு மட்டும்தான் முழு அர்த்தம் பெறுகிறது இறந்த காலம் என் இனம் இறந்த காலமென.